மீண்டும் ஹிந்தி எதிர்ப்பு...!

தலைவர் கருணாநிதி ஓய்வெடுக்கவேண்டும். அவரது ஹிந்தி எதிர்ப்பு கொள்கை இறந்துபோய் பலகாலம் ஆகிவிட்டது. மீண்டும் அதனை உயிர்ப்பிக்க நினைப்பது தவறு. இன்று சென்னையில் சரவணபவனில் சுடுதண்ணி கூட "கரம் பானி" என்று கேட்டால்தான் கிடைக்கும். தமிழகத்தில் பெரும்பாலான பெரும் கட்டிடங்கள் கட்டும் பணியிலேயும், பெரும் தொட்டங்களிலேயும், ஹிந்தி தெரியாமால் தமிழர்களால் வேலை வாங்கமுடியாது. 

தேசிய அளவில், இந்திய அரசு தனது அரசு அலுவலர்களை சமூக இணைய தளங்களில் ஹிந்தியை முக்கிய மொழியாக உபயோகிக்க சொல்லியிருப்பது மீண்டும் "ஹிந்தி திணிப்பு" என்கின்ற செத்த பாம்பை அடிக்க உபயோகப்படலாம், ஆனால் இவர் அடிப்பதை பார்க்க தெருவோரும் ரெண்டு பேர்கூட வரமாட்டார்கள். "தயாநிதி மாறனுக்கு ஹிந்தி தெரியும்" என்று அவரை நாடாளுமன்றதிர்க்கு அனுப்பியதை மக்கள் மறந்துவிடவில்லை. இவர் வீட்டிற்கும் கட்சிக்கும் ஹிந்தி தேவை, இவர் குடும்பம் நடத்தும் உணவகங்களில் ஹிந்தி தேவை ஆனால் நாட்டிற்கு மாத்திரம் ஹிந்தி அவசியமில்லை, என்கின்ற போலித்தனம் இன்னுமும் எடுபடும் என்று இவர் நினைத்தால் மக்கள் ஏற்க்க மாட்டார்கள் என்றே தோன்றுகின்றது. 

மேலும் இன்று இந்திய மொழிகளில் இணையதள மொழிபெயர்ப்பு நன்றாகவே கிடைக்கின்ற நேரத்தில், ஆங்கில "பாலம்" இன்றி இந்திய மொழிகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மொழிபெயர்க்கும் மென்பொருள் பரவலாகவே அமைந்துள்ளது. நம்மில் பலரும் அதனை உபயோகிக்கின்றோம். 

வடநாட்டில் உள்ளார்கள் நம்முடன் பேச தமிழ் கற்ப்பார்கள் என்பது மிக கடினமான நிகழ்வு. நமக்கு பலமொழிகள் கற்பது சுலபம். தமிழக மக்கள் மலாய், சீனம், பிரெஞ்சு, என்று பல மொழிகளும் நீண்ட நாட்களாக கற்றுவருவது தெரிந்ததே, டில்லி அரசாங்கத்தில் ஒழுங்கா ஆங்கிலம் பேசறவன் பெரும்பாலும் நம்மவன்தான். அவனும் மற்ற பேருடன் பேசுவதற்கு அங்கே ஹிந்தியை கையாடவேண்டியிருக்கிறது.

அவர்களுக்கு தெரிந்தபாஷையில் அவர்கள் ட்வீட்டிட்டு போகட்டும், நமக்கு பல மொழிகள் தெரிந்ததால் நாம் உலகெங்கும் ட்வீட்டுவொம்! விடுங்க தலைவரே...அதற்கிடையே தமிழ் மொழியை வளர்க்கணும்னா, சன் டி வி யில செய்தி வாசிக்கிறவங்களுக்கு கொஞ்சம் தமிழ் சொல்லிகொடுங்க.

Comments

Popular Posts